கோலாலம்பூர்: தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால் 50,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.
இழப்பீடு தலா ஒருவருக்கு 500,000 ரிங்கிட் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நேற்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடம் பாபா தெரிவித்தார்.
தேசிய பேரிடர் நிர்வாகம் இழப்பீட்டை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆரம்பக்கட்ட நிதியாக பத்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் சொன்னார். பக்கவிளைவு காரணமாக மருத்துமனையில் நீண்டகாலம் தங்க நேரிட்டால் அவர்களுக்கு 50,000 ரிங்கிட் உதவி தொகை வழங்கப்படும். பக்க விளைவால் நிரந்தர இயலாமை அல்லது மரணம் ஏற்பட்டால் 500,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஆடம் பாபா அறிவித்தார்.
இதற்கிடையே குைறந்தது 1.5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் தெரிவித்தார்.
மார்ச் 31ஆம் தேதிக்குள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சோதனைகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான்கு முக்கிய பொருளியல் வட்டாரங்களில் உள்ள ஊழியர்களுக்கு சோதனை முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரவணன் கூறினார். தயாரிப்புத் துறை, கட்டுமானத் துறை, வேளாண் துறையைச் சேர்ந்தவர்களுக்குத் கொவிட் பரிசோதனையில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

