இரண்டு மில்லியன் பேர் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து 18,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத் தலைநகரான சிட்னியைச் சுற்றியும் தென்கிழக்கு குவீன்ஸ்லாந்தைச் சுற்றியும் உள்ள ஆறுகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 25 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
நூறு ஆண்டுகள் காணாத மழை கடந்த சில வாரங்களாக பெய்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே மழை, வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளெடிஸ் பெரெஜிக்லியன், இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு பங்கினர் வசிக்கும் இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு எட்டு மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்ெகனவே கொள்ளைநோய் பரவலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு கனமழை மேலும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சுமார் 200 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்று வெள்ளம் சற்று வடிந்ததால் ஒரு சிலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை நிபுணர்கள் எச்சரித்து உள்ள னர்.

