கோலாலம்பூர்: பிரதமர் முகைதீன் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும் மலாய் சமூகத்தின் ஒற்றுமை பாதிக்காது என்று அம்னோ வலியுறுத்தியுள்ளது.
அம்னோவின் இரண்டு நாள் உச்சமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியது.
அதில் மலாய் சமூகத்தின் ஒற்றுமையை அரசியலாக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
பிரதமர் முகைதீன் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகு வதால் மலாய் சமூகத்தின் ஒற்றுமை பாதிக்காது. அம்னோ தொடர்ந்து சமூகத்தின் ஒற்றுமைக்கு பாடுபடும் என்றும் உச்சமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெர்சத்துக் கட்சிக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் முடிந்து விடும் என்று அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி அண்மையில் கூறியிருந்தார். அம்னோவில் உள்ள சிலர் இதனை எதிர்க்கின்றனர். பாஸ் கட்சி உட்பட மூன்று மலாய் கட்சி களை உள்ளடக்கி தற்போதைய ஆளும் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியிலிருந்து அம்னோ விலகுவதால் சமூகத்தின் ஒற்றுமை பாதிப்புக்கு உள்ளாகும் என்று அம்னோவில் உள்ள சிலர் ஆவேசமடைந்துள்ளனர்.
ஆனால் மலாய் சமூகத்தின் ஒற்றுமையை அரசியலாக்கி பிரதமர் கட்சியுடன் கூட்டணியைத் தொடர அழுத்தம் கொடுக்கப்படுவதாக அம்னோ தலைமை குற்றம் சாட்டுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய அம்னோ உச்சமன்றக் கூட்டம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது தொடங்கியுள்ள கூட்டமும் வழக்கமான ஐந்து நாட்களிலிருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
துணைத் தலைவர் முஹமட் ஹசன், இளையர், இளம் பெண்கள், மகளிர் பிரிவு கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு அம்னோ மீண்டும் திரும்ப முடியும்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்க விரும்புவதாக அம்னோ அறிவித்தது. பிரதமர் பதவியை குறி வைக்கும் மற்ற கட்சிகளை புறக்கணிப்பதாகவும் அது கூறியுள்ளது. இதனால் பிரதமர் முகைதீனின் பெர்சத்து, எதிர்க்கட்சியான கெஅடிலான் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை அம்னோ தெளிவுபடுத்தியுள்ளது.

