பார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் மக்கள் கொவிட்-19 நோய்த்தொற்றுச் சூழலைப் பொருட்படுத்தாமல் இசைமழையில் நனைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அந்நகரில் ஏறத்தாழ 5,000 பேர் 'ராக்' இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் சற்று நேரத்தில் விற்றுத்தீர்ந்தன.
விரைவு நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்கள் அந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். தங்களது கைபேசிச் செயலியில் பரிசோதனை முடிவுகளை ரசிகர்கள் 15 நிமிடங்களுக்குள் பெற்றுக்கொண்டனர்.
முகக்கவசம் அணிந்த ரசிகர்களை மட்டும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்தனர்.
இதய நோய், புற்றுநோய், அண்மையில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
கொவிட்-19 சூழலை மறந்து இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது தங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி தருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சி அற்புதமாக இருந்ததாகவும் அனைத்து நேரத்திலும் தாங்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளைப் படிப்படியாக நடத்த ஸ்பெயின் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

