ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தெற்கு சுலாவேசி மாநிலத் தலைநகர் மக்காசாரில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே நேற்று நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதில் 14 பேர் காயம் அடைந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது தேவாலயத்திற்குள் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது மோட்டார்சைக்கிள் ஒன்றில் வந்த இருவர், தேவாலய வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் தேவாலய பாதுகாவலரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தேசிய போலிஸ் பேச்சாளர் அர்கோ யுவோனோ செய்தியாளர்களிடம் கூறினார்.
பின்னர் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 10.20 மணிக்கு தேவாலயத்திற்கு வெளியே சாலையின் நடுவே வெடிப்பு ஏற்பட்டு, தீயும் புகையும் கிளம்பின.
இச்சம்பவத்தில் காயமடைந்தோருக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயங்கரவாதச் சம்பவத்திற்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை விசாரிக்குமாறும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பைத் துடைத்தொழிக்கவும் தேசிய போலிஸ் தலைவருக்கு அதிபர் விடோடோ உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்கு நேற்றைய நிலவரப்படி எந்தவொரு தரப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இதில் உயிரிழந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்காரர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.
அண்மையில், சில பயங்கரவாதிகளைப் போலிசார் கைது செய்திருந்த நடவடிக்கைக்கும் தேவாலய வெடிப்புக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

