டாக்கா: பங்ளாதேஷில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் 19 வயது இளையர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் குறைந்தது 15 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகால நிறைவை பங்ளாதேஷ் குறித்தது. அதையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அந்நாட்டிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
அவரது வருகையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பலர் வீதிகளில் ஆர்ப்பரித்தனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக திரு மோடி சமூக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர்கள் அவர் மீது குற்றஞ்சாட்டினர்.
பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் திரு மோடிக்கு எதிராக "நடவடிக்கை, நடவடிக்கை, நேரடி நடவடிக்கை" என்ற வாசகங்களை முழக்கமிட்டனர். டாக்காவை சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை அவர்கள் முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் அறைகலன்களையும் டயர்களையும் எரித்தனர். நெடுஞ்சாலையை அவர்கள் முற்றுகையிட்டதால் போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் ஐவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

