நியூயார்க்: அமெரிக்காவிலேயே முதல்முறையாக நியூயார்க் மாநிலத்தில் 'கொவிட்-19 டிஜிட்டல் பாஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்களின் தடுப்பூசி பற்றிய விவரங்கள், கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
நியூயார்க்கில் விரைவில் வர்த்தகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு விடுதிகளை திறக்கும் நோக்கத்தில் புதிய செயலி அறிமுகம் கண்டுள்ளது.
'ஐபிஎம்' நிறுவனத்துடன் சேர்ந்து நியூயார்க் உருவாக்கிய செயலி 'Excelsior Pass' என அழைக்கப்படுகிறது. விமானப் பயணச்சீட்டுகளை போலவே கைபேசியில் இந்தச் செயலியையும் காட்டி தேவையான இடங்களில் நுழையலாம்.
பயனீட்டாளர்களுக்கு 'கியூஆர்' குறியீட்டுடன் மின்னிலக்க நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.
இதனை அச்சிட்டு அல்லது கைபேசியில் சேகரித்து வைக்கலாம். இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள வர்த்தகர்கள் அந்த 'கியூஆர்' குறியீட்டை வருடி வாடிக்கையாளர்களின் தடுப்பூசி தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
பொதுமக்களின் தரவுகள் மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும் என்று நியூயார்க் உறுதியளித்துள்ளது.
"மக்களின் சுகாதாரம் முக்கியமா, பொருளியல் முக்கியமா என்று கேட்டால் இரண்டுமே முக்கியம் என்ேபன்," என்று நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு குவோமோ தெரிவித்தார்.
தனியார் துறையினர் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் தடுப்பூசி கடப்பிதழைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜெப்ஃரி ஸியனண்ட்ஸ் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
விளையாட்டு அரங்கம், திருமண விருந்து அல்லது இதர சமூக ஒன்றுகூடல் போன்ற இடங்களில் புதிய செயலி பயன் படுத்தப்படும்
நியூயார்க் நகரத்தில் 20,000 இருக்கைகளைக் கொண்ட மெடிசன் ஸ்கொயர் கார்டன், வரும் வாரங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளது.
தொடக்கமாக ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து சிறிய கலை, பொழுதுபோக்கு நிலையங்களில் இந்தச் செயலி பயன்படுத்தப்பட விருக்கிறது.

