புத்ராஜெயா: தற்போதைய அமைச்சரவையில் அம்னோ அமைச்சர்கள் நீடிப்பார்கள் என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.
அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆளும் கூட்டணியுடனான உறவு முடிவுக்கு வரும் என்று அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
அம்னோ அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தனது அமைச்சர்கள் பதவி விலகத் தயார் என்று அம்னோ அறிவித்தது.
இந்த நிலையில் அம்னோ அமைச்சர்கள் தொடர்ந்து அமைச் சரவையில் நீடிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பிரதமர் முகைதீன் யாசின், "நாடு சிரமமான காலக்கட்டத்தில் உள்ளது. கொவிட்-19 சூழலை சமாளித்தாக வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நாட்டு நலனே முக்கியம்," என்று குறிப்பிட்டார்.
நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் அம்னோ கட்சியினர் தன்னுடைய யோசனையை ஏற்று அமைச்சரவையில் இருக்க சம்மதித்து உள்ளதாக பெர்சத்துக் கட்சியின் தலைவருமான பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

