ஜகார்த்தா: ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி கிடைத்துவிட்டது என்று இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் மாண்டனர்.
விமான விபத்துக்கான காரணத்தை அறிய இந்தக் குரல் பதிவுப் பெட்டி மிகவும் முக்கியம். விமானி அறையில் விமானிகளின் உரையாடல்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
கடைசி நிமிடத்தில் விமானத்திற்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து குரல் பதிவு மூலம் தெரிய வரலாம்.
ஆனால் குரல் பதிவுப் பெட்டி நல்ல நிலையில் இருக்கிறதா என்பது பற்றி தகவல் இல்லை. சுமார் 26 ஆண்டுகள் பழமையான போயிங் 737-500 ரக விமானம் விபத்துக்குள்ளானதும் சில நாட்களிலேயே குரல் பதிவுப் பெட்டியின் உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகே குரல் பதிவுப் பெட்டி கிடைத்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் இயந்திரம் சமநிலையற்று செயல்பட்டதால் விமானம் சுழன்று பின்னர் கடலில் விழுந்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

