கோலாலம்பூர்: மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சரக்குக் கப்பல் ஒன்று கடந்த நான்கு நாட்களாக தீப்பற்றி எரிகிறது.
தீயை அணைக்க மலேசிய தீயணைப்புப் படையினர் நான்கு நாட்களாகப் போராடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் பதிவான இன்டரேஷியா கெடலிஸ்ட் சரக்குக் கப்பலில் இருக்கும் கொள்கலன்களிலிருந்து கடந்த புதன்கிழமையன்று புகை வெளியேறியதை மலேசிய துறைமுக அதிகாரிகள் கண்டதும் துறைமுகத்துக்குத் திரும்புமாறு கப்பல் மாலுமிக்கு உத்தரவிடப்பட்டது.
நேற்று காலை 11 மணி நிலவரப்படி தீப்பற்றி எரியும் 11 கொள்
கலன்களில் ஆறு கொள்கலன்களில் இருந்த தீ அணைக்கப்பட்டுவிட்டதாக சிலாங்கூர்
மாநிலத்தின் தீயணைப்பு, மீட்புப் பணித் துறை இயக்குநர்
நூராஸாம் காமிஸ் தெரிவித்தார். தீயணைப்புப் பணிகள் தொடர்வதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து கொள்கலன்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. கொள்கலன்களுக்கிடையே மிகச் சிறிய இடம் மட்டுமே உள்ளது. அதில் தீயணைப்புப் படையினர் புகுந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் சவால்மிக்கதாக உள்ளது.
"அதுமட்டுமல்லாது, கொள்
கலன்களுக்குள் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. கொள்கலன்களைத் திறப்பதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும்.
"அந்தக் கப்பலின் சிப்பந்திகள் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததால் அவர்களுடன் தொடர்புகொள்
வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது," என்று திரு நூராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சரக்குக் கப்பல் கிள்ளான் துறைமுகத்திலிருந்து இந்தியாவில் கொச்சினுக்குச் செல்ல இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

