கோலாலம்பூர்: தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் 2வது, 3வது கட்டத்தில் தனியார் மருத்துவமனை களையும் தடுப்பூசி நிலையங்களாகப் பயன்படுத்த மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றிய விவரங்களை வெளியிட்ட சுகாதார அமைச்சர் ஆதம் பாபா, தடுப்பூசித் திட்டத்தை பரவலாக்க அரசாங்கமே தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை விநியோகிக்கும் என்றார்.
"நாட்டில் 203 தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அனைத்து தனியார் மருத்துவ மனைகளும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பங்காற்ற முன் வர வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதில் பங்கேற்க விரும்பும் மருத்துவமனைகள் இன்று முதல் 'ProtectHealth' இணையத் தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் 2,304 தனியார் மருத்துவர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஆதம் பாபா குறிப்பிட்டார்,
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் 2வது கட்டத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சினோவாக்' தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்ததாக பெர்னாமா குறிப்பிட்டது.
அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கைரி, 583,903 பேருக்கு குறைந்தது ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.
அவர்களில் 395,891 பேருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 8.51 மில்லியன் பேர் தடுப்பூசிக்குப் பதிவு செய்து உள்ளனர் என்று அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சரு மான கைரி கூறினார். இதற்கிடையே ரமலான் மாதத்தையொட்டி சில கட்டுப்பாடுகளை மலேசிய அரசு தளர்த்தியுள்ளது.

