ஹாங்காங்: சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான சிறப்பு இருவழிப் பயண ஏற்பாடு திட்டம் தள்ளிப்போனதை அடுத்து மீண்டும் அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதற்கிடையே, ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், தங்களின் பயணத்திற்கு முன்பு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சிங்கப்பூர் விதிக்காது என்றார் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்.
இருப்பினும், சிங்கப்பூருக்குச் செல்லவிருக்கும் ஹாங்காங்வாசிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.
இத்தகைய பயண ஏற்பாட்டின் கீழ் செல்வோர், தடுப்பூசியின் இரு 'டோஸ்' அளவையும் போட்டு முடித்திருப்பதுடன் இரண்டாவது 'டோஸ்' முடிந்து 14 நாட்களுக்குப் பின்னரே விமானப் பயணங்களில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று மார்ச் 29ஆம் தேதியன்று வர்த்தக, பொருளியல் மேம்பாட்டுத் துறை செயலாளர் எட்வர்ட் யாவ் கூறி இருந்தார்.
அதே கருத்தை திருவாட்டி லாம் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஹாங்காங்வாசிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க சலுகைகள் வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் கைகூடும் காலம் குறித்துக் கேட்கப்பட்டபோது, இரு தரப்பிலிருந்தும் கூடிய விரைவில் ஒப்புதல் வருவதைத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஒப்பந்தப்படி ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானச் சேவை மூலம் வருபவர்கள் பயணத்துக்கு முன்பு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும்.
குறைந்த, மிதமான கொரோனா தொற்று பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான பயண ஏற்பாடுகள் இவ்வாண்டின் பிற்பாதியில் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்று Money FM 89.3 வானொலிக்கு அளித்த பேட்டியில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் கூறியிருந்தார்.
தனிமைப்படுத்தும் விதிமுறை, இல்லத் தனிமை உத்தரவு ஆகியவற்றை நீக்குவது, முடங்கிக்
கிடக்கும் விமானப் போக்குவரத்துச் சேவையை மீண்டும் உயிர்ப்பிக்க முக்கியமானவை என்றார் அவர்.
ஹாங்காங்கில் கொவிட்-19 சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயண ஏற்பாடு திட்டம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
கடந்த வாரம் ஒரு நாளில் சராசரியாக இரண்டு அல்லது மூன்று சமூகத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று பதிவான 13 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் சமூக அளவில் தொற்றியவை மூன்று.