பெட்டாலிங் ஜயா: மலேசியாவில் நேற்று 1,767 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நாட்டின் ஆகப் பெரிய மாநிலமான சரவாக்கில் மட்டும் புதிய உச்சமாக 607 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
மேலும் 12 கொவிட்-19 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
பிப்ரவரி 27க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான ஆக அதிகமான உயிரிழப்புகள் எண்ணிக்கை இதுவாகும்.
இத்துடன் மலேசியாவில் 363,940 கிருமித்தொற்று சம்பவங்களும் 1,345 கொவிட்-19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
நேற்றைய நிலவரப்படி 346,295 அதாவது பாதிக்கப்பட்டோரில் 95.2 விழுக்காட்டினர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டாலும் தற்போது கொவிட்-19 சிகிச்சை மையங்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதியன்று 14,399 பேர் இம்மையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது 13.2% கூடுதலாக, அதாவது 16,300 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் தீவிர சிகிச்சை பிரிவில் 199 பேரும் சுவாசக் கருவியைச் சார்ந்து 82 பேரும் உள்ளனர்.
புதிதாகப் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில், 1,758 சம்பவங்கள் சமூக அளவில் தொற்றியவை என்றும் எஞ்சிய ஒன்பது சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தொடர்புடையவை என்றும் சுகாதார அமைச்சர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அக்டோபர் மாதத்திற்குள்
80% மக்களுக்குத் தடுப்பூசி
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திற்குள் 80% மலேசியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திலிருந்து தடுப்பூசிக்கான பதிவு எண்ணிக்கையை தடுப்பூசி கொள்முதல் முந்திவிடும் என்றார் திரு கைரி. ஒன்பது மில்லியன் பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர்.