ஒட்டாவா: கொவிட்-19 கொள்ளைநோய் பரவத் தொடங்கியதை அடுத்து வருத்தம் அளிக்கும் ஒரு மைல்கல்லை கனடா அடைந்துள்ளது. அமெரிக்காவைவிட அதிகமான ஒரு நாள் கிருமித்தொற்று சம்பவங்கள் கனடாவில் பதிவாகிஉள்ளன.
கடந்த ஏழு நாட்களாக கனடாவின் ஒவ்வொரு 100,000 பேரில் சுமார் 22 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கனடாவின் ஆகப் பெரிய நகரான டொரொன்டோ, அதிக நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
"இதுவரை இருந்து வரும் கொள்ளைநோயின் ஆக மோசமான கட்டம் இதுதான்," என்றார் அந்நாட்டு பல்கலைக்கழக சுகாதார கட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ஸ்மித்.
அவசர அறுவை சிகிச்சைகளைத் தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்தி வைக்குமாறு ஒன்டாரியோ உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோய், இதய மற்றும் மூளை அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட்-19 நோயாளிகளுடன் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான டொரொன்டோ மருத்துவமனையில் பெரியவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிலையும் வந்துவிட்டது.
டொரொன்டோவில் நேற்று முன்தினம் 1,296 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இந்நிலை தொடர்ந்தால் மாத இறுதிக்குள் நாள் ஒன்றுக்கு 2,500 சம்பவங்கள் பதிவாகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.