சிட்னி: கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதன் மூலம் தனது அனைத்துலக நாடுகளுக்கான எல்லையை ஆஸ்திரேலியா மீண்டும் திறப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டின் காரணமாக ஆஸ்திரேலிய குடிமக்களும் நிரந்தவாசிகளும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முக்கிய காரணங்களுக்காக அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியாவில் தங்கள் சொந்தச் செலவில் இரண்டு வாரங்களுக்கு விடுதிகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
"குறிப்பாக முக்கியமான நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாமல் முடங்கியிருப்பவர்களுக்கு இது பயனளிக்கும்," என்று பெர்த் நகரில் நடந்த ஒரு சமூகக் கருத்தரங்கில் தெரிவித்தார்.
இது நடைமுறைப்படுத்தப்பட்டால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட அவசரப் பயணங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பியதும் தங்களைத் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
"பகுதி பகுதியாக எல்லைகளைத் திறப்பதற்கு சற்றுக் காலம் பிடிக்கலாம். ஆஸ்திரேலியாவில் எளிதில் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே இது சாத்தியமாகும்.
"ஏனெனில் வெளிநாடு சென்று திரும்புபவர்களால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
"நாள்தோறும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,000ஐ எட்டக்கூடும். தற்போது சமூக அளவில் பாதிப்பு இல்லை," என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, தனது எல்லையைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடியது.
அதன் காரணமாக அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதுவரையில் அங்கு 29,400 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 910 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

