வாஷிங்டன்: அமெரிக்க அதிபரும் ஜப்பான் பிரதமரும் தைவான் நீரிணைப் பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநிறுத்தபப்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராகத் திரு பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே அமெரிக்காவுக்குச் சென்றார். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு , 'புதிய யுகத்துக்கான அமெரிக்க - ஜப்பான் அனைத்துலக பங்காளித்துவம்' எனும் தலைப்பிலான அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் முக்கியத்துவம் குறித்து அந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.
கிழக்கு சீனக் கடல், தெற்கு சீனக் கடல், வடகொரியா போன்றவற்றின் தொடர்பில் சீனா விடுக்கும் சவால்களை இணைந்து எதிர்கொள்ளவும் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சுதந்திரமான நடமாட்டத்தையும் உறுதிப்படுத்தவும் கடப்பாடு கொண்டிருப்பதாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர். இந்த விவகாரங்களின் தொடர்பில் அமெரிக்கா ஒரு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஜப்பான், அந்தப் பயணத்தைத் திசைமாற்றி விட்டிருப்பதால் ஜப்பானுக்கு சீனா நன்றி தெரிவிக்க வேண்டும் என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான ஆய்வுக் கழகத்தின் தலைவர் டாக்டர் டோஷ் மினோஹரா தெரிவித்தார்.
ஜப்பான் நிர்வகிக்கும் பகுதியில் சீனாவின் சுற்றுக்காவல் கப்பல் கடந்த 2 மாதங்களாக இருப்பது ஜப்பானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

