புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அபாய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பங்கேற்றபோது பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் குறைகூறப்படுகிறது.
"இதுபோன்ற பெரும் கூட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை. கொரோனா கிருமியை இந்தியா கடந்த ஆண்டு வென்றது. இந்தியா மீண்டும் வெற்றி பெற முடியும்," என்று பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் போதுமான அளவு ஆக்சிஜனும் 'ரெம்டெசிவிர்' மருந்தும் இல்லை என்றும் இது குறித்து பிரதமரிடம் விவரம் தெரிவிக்க முடியவில்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பதால் தம்முடன் பேச இயலவில்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிற நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை அனுப்பி வரும் நிலையில், உள்நாட்டில் 123 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1.2 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

