பெய்ஜிங்: சீனாவில் குழந்தைப் பிறப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 மில்லியனுக் கும் குறைந்த அளவில் இருந்து வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்ற கொள்கையை அரசாங்கம் விரைவில் கைவிடாமல் இருந்தால் குழந்தைப் பிறப்பு அந்த அளவுக்குக் குறையும் என்று வல்லுநர் ஒருவர் கூறியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு சீனாவின் மொத்த மக்கள்தொகை குறையும் என்று குவாங்டோங் மக்கள்தொகை மேம்பாட்டுப் பயிலகம் என்ற அமைப்பின் இயக்குநர் டோங் யூஷெங், சீனாவின் நிதித் துறை செய்தி ஊடகமான யிசாயிடம் கூறி இருக்கிறார்.
சீனாவில் கடந்த 2019ல் பிறந்த புதிய குழந்தைகளின் எண்ணிக்கை 580,000 குறைந்து 14.65 மில்லியனாக இருந்தது. 2019ல் ஆயிரத்துக்கு 10.48 என்ற அளவில் பிறப்பு விகிதம் இருந்தது.
இது 1949 ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த ஒன்றாக இருக்கிறது என்பது தேசிய புள்ளிவிவர இலாகா மூலம் தெரியவருகிறது.
சென்ற ஆண்டின் மக்கள்தொகை விவரங்கள் இனிமேல்தான் வெளியிடப்பட வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை 2016ல் சீனா கைவிட்டது. என்றாலும் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வீடு ஆகியவற்றுக்கான செலவு அதிகமாகி வருவதால் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதியர் விரும்புவதில்லை.

