உலகில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 314,835 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் 2,104 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 16 மில்லியனை நெருங்கி இருக்கிறது; பலி எண்ணிக்கை 184,657ஆக அதிகரித்தது.
அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 297,000 பேரை கொரோனா தொற்றியிருந்ததே முந்திய சாதனை.
இதனிடையே, தேசிய நெருக்கடிநிலை போன்றதொரு சூழலை நாடு எதிர்கொண்டுள்ளதால் கொரோனா பரவலைச் சமாளிக்க ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் விநியோகம், தடுப்பூசி நடவடிக்கை, பொது முடக்கத்தை அறிவிப்பதற்கான அதிகாரம் போன்றவை உட்பட ஒரு தேசிய அளவிலான திட்டத்தைத் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

