ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இன்று நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மியன்மார் நெருக் கடி குறித்து விவாதிக்கப்படவிருக் கிறது.
இந்த மாநாட்டில் சிங்கப்பூர் உட்பட ஆசியான் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி அதிகார பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய மியன்மாரின் ராணுவத் தளபதியும் இதில் பங்கேற்கவிருக்கிறார்.
இதனால் ஆசியான் கூட்டத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆங் சான் சூச்சி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 45 அரசாங்க சார்பற்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
"மியன்மார் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் விவாதிக்காமல் ஆலோசிக்காமல் மியன்மாரின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது," என்று சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட கடிதத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கேட்டுக்கொண்டன.
"உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க மியன்மார் ராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுத்திருப்பது சொந்த மக்களையே அவரது ராணுவம் படுகொலை செய்திருப்பதை அங்கீகரிப்பதுபோல் உள்ளது," என்றும் அமைப்புகள் கூறியுள்ளன.
மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முதல் அனைத்துலக முயற்சியாக ஆசியான் உச்சநிலைக் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மியன் மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்று குவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்துள்ளது.
ஆசியானுக்கும் இந்தக் கூட்டம் சோதனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக உள்நாட்டு விவகாரங்களில் ஆசியான் நாடுகள் தலையிடுவதில்லை.
இந்தச் சூழ்நிலையில் உறுப்பு நாடுகளின் ஒன்றான மியன்மாரின் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் ஜகார்த்தாவில் ஆலோசனை நடத்தவிருக்கின்ற னர்.

