பேங்காக்: தாய்லாந்தில் கிருமித்தொற்று எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் புதிதாக 2,070 பேர் பாதிக்கப்பட்டனர்.
அந்நாட்டில் கொள்ளைநோய் பரவியதிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மூன்றாவது அலையில் தாய்லாந்து சிக்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு மேலும் நால்வர் பலியாகிவிட்டனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,183க்கு அதிகரித்துள்ளது. மொத்தம் 121 பேர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்து அரசு, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் 23 நாட்களில் புதிய உருமாறிய கிருமியால் 20,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். 27 பேர் மாண்டனர். பேங்காக்கில் தொடங்கிய கிருமித் தொற்று நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து அடுத்த மாதம் இறுதி வரை பள்ளிகள், மதுபானக் கூடங்கள், உடற்பிடிப்பு நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

