இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு அருகில் கடலில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலில் பிராணவாயு இருப்பு தீர்ந்துபோனதாக நம்பப்படுகிறது.
பாலித் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், நேரம் செல்ல செல்ல நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருப்பவர்களை மீட்கும் நம்பிக்கையும் குறைந்து வருவதாகக் கூறப்பட்டது.
கேஆர்ஐ நங்காலா 402’ எனும் அந்த நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்ட பிறகும் மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய அளவுக்கு பிராணவாயு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 24) அதிகாலை வரை அந்த பிராணவாயு அளவு போதுமானதாக இருந்திருக்கும் என மதிப்பிடப்படும் நிலையில், அந்த நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அதிலிருந்த 53 பேர் பற்றி தகவல் எதுவும் இல்லை.
“எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என கடற்படைப் பேச்சாளர் ஜூலியஸ் விடோஜோனோ குறிப்பிட்டார்.
இந்தோனீசியாவிடம் இருக்கும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான அது, கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட கடற்படைப் பயிற்சியின்போது காணாமல்போனது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் இடத்துக்கு அருகில் எண்ணெய்த் துளிகள் காணப்பட்டுள்ளதாகவும் அதன் எரிபொருள் தொட்டி பாதிப்படைந்திருந்தால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அச்சம் நிலவுகிறது.