பேங்காக்: ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங், ஆசியான் பேராளர் குழு மியன்மாரைப் பார்வையிடவும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பார்வையிடப்போகும் பேராளர் குழுவையும் மனிதாபிமான உதவிகளையும் ஆசியான் அனுப்புவதை அவர் எதிர்பார்த்து இருப்பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், கூட்டத்திற்குப் பிறகு குறிப்பிட்டார்.
கொவிட்-19 பரவலுக்குப் பிறகு ஆசியான் தலைவர்களிடையே நடைபெறும் முதல் நேரடிக் கூட்டம் இது.
மியன்மார் வன்முறையைக் கைவிட்டு, அரசியல் கைதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தினர். இதே கருத்தை முன்பு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிப்ரவரி 1ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து 745 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் 3,300க்கும் அதிகமானோர் சிறையிலிடப்பட்டதாகவும் அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் தெரிவித்தது. பலர் பாதுகாப்புப் படைகளால் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் அறிக்கைகள் தெரிவித்தன
கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டத்தில் மியன்மார் திணறிவரும் வேளையில், அரசியல் நெருக்கடி நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் 3.4 மில்லியன் வரையிலான மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு மியன்மாரை எச்சரித்துள்ளது.
லாவோஸ், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து நாட்டுத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால், மியன்மாருக்கான ஐக்கிய நாடுகள் தூதர் திருவாட்டி கிறிஸ்டைன் ஸ்ரானர் பர்கெனர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் உட்பட வட்டார மூத்த அதிகாரிகளுடன் உரையாடல்களை நடத்தினார்.
ராணுவ ஆட்சி நடப்புக்கு வந்தது முதல் மியன்மாருக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.

