தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ காலமானார். இவருக்கு வயது 87.
1960களின் தொடக்கத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த இவர், பாரிஸ் பல்கலைக்கழகத்தின் Ecole Pratique Des Hautes Etudes என்ற உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கிய பிரான்சுவா குரோ, 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ் வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளைப் பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் மூன்று மாதக் காலத்தைப் புதுச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டு வந்த பிரான்சுவா குரோ, பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லியோன் நகரில் வசித்து வந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் பிரான்சிலேயே தங்கிவிட்ட பிரான்சுவா குரோ, தன்னிடமிருந்த ஏறத்தாழ 10,000 அரிய நூல்களைக் கனடாவில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்.
அவரது தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் உலகளவில் புகழ்ப்பெற்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. பிரான்சுவா குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு மட்டுமின்றி, நவீனத் தமிழ் இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும்.

