தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
"தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். கொரோனா தடுப்பு விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டும் அதை நடைமுறைப்படுத்தவில்லை," என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

