கோலாலம்பூர்: ஆஸ்ட்ராஸெனகா கொவிட்-19 தடுப்பூசி மலேசியாவில் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.
அந்தத் தடுப்பூசியை முழுமையாக ஆராய்ந்து மதிப்பிட்டதில், அதனால் ஏற்படும் தீமைகளைவிட நன்மைகள் அதிகம் என்பது தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டார் அவர். 60 மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களுக்கு ஆஸ்ட்ரா ஸெனகா தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மலேசியா3.2 மில்லியன் மக்களுக்குப் போடத் தேவையான ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை மே மாதத்தில் பெற இருக்கிறது.
இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டதால் பல ஐரோப்பிய நாடுகள் இந்த மருந்தின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சிலாங்கூரில் உள்ள 79 பள்ளிகள் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன.
பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் 18 பள்ளிகள், ஹுலு லங்காட் மாவட்டத்தில் 19 பள்ளிகள், கோம்பாக் மாவட்டத்தில் 9 பள்ளிகள், பெட்டாலிங் உத்தமா மாவட்டத்தில் 9 பள்ளிகள், கிள்ளான் மாவட்டத்தில் 15 பள்ளிகள், செபாங் மாவட்டத்தில் 2 பள்ளிகள், ஹுலு சிலாங்கூர் மாவட்டத்தில் 5 பள்ளி கள், கோலா லங்காட் மாவட்டத்தில் 2 பள்ளிகள் என மொத்தம் 79 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிகளில் ஒரு கொரோனா தொற்றுச் சம்பவம் பதிவானாலும்கூட, பள்ளி யைச் சுத்திகரிப்பதற்காக பள்ளிகள் உடனடியாக மூடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல பினாங்கிலும் 20 பள்ளிகள் நேற்று முதல் 2 நாள்
களுக்கு மூடப்பட்டுள்ளன. மலேசியாவின் வேறு பகுதிகளிலும் இதே காரணங்களுக்காக பள்ளிகள் மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இவ்வாண்டு தொடக்கம் இம்மாதம் 20ஆம் தேதி வரை முதல் நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் மொத்தம் 4,868 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
நேற்று மலேசியாவில் 2,776 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 30 முதல் 84 வயதுக்குட்பட்ட 13 பேர் நேற்று உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டவர். கொவிட்-19 தொற்றால் அங்கு இதுவரை 1,449 பேர் பலியாகினர்.
உருமாறிய கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மலேசியா, இந்தியாவுக்கு இடையேயான விமானங்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

