கோலாலம்பூர்: மலேசியாவின் தடுப்பூசி வாங்கும் திட்டத்துக்கு தேசிய அறக்கொடை நிதியிலிருந்து செலவிடப்படும் என்று நிதி அமைச்சர் நேற்று தெரிவித்தார். அந்த அறக்கட்டளை நிதிக்கு தேசிய எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸ் நிதி வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த நிதியிலிருந்து பணம் எடுத்துக்கொள்வது தொடர்பான அவசரச் சட்டத்தை அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்தது. மாநிலங்களின் உள்கட்டமைப்பு, மற்ற மேம்பாடுகளுக்கு மத்திய கடன் ஆதரவு அளிப்பதற்காக இந்த நிதி நிறுவப்பட்டிருந்தது.
அந்த நிதியிலிருக்கும் 19.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 5 பில்லியன் ரிங்கிட் (S$1.6 பில்லியன்) தொகையில் மக்கள் தொகையில் 120 விழுக்காட்டினருக்குப் போடும் அளவுக்கான தடுப்பூசிகள் வாங்க எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ் தெரிவித்தார்.
"நாட்டின் பொருளியல் மீட்சியடைய தடுப்பூசி முக்கியம். எதிர்காலச் சந்ததியினரைப் பாதுகாக்கவே இந்த நிதி உருவாக்கப்பட்டது," என செய்தியாளர்களிடம் ஸஃப்ருல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பெட்ரோனாஸ் நிறுவனம் அந்த நிதிக்கு 10.4 பில்லியன் ரிங்கிட் வழங்கியது. எஞ்சிய 9.1 பில்லியன் ரிங்கிட் தொகையானது முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட லாபம் என்பதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டின் ஈவுத் தொகையாக 18 பில்லியன் ரிங்கிட்டை பெட்ரோனாஸ் நிறுவனம் இந்த ஆண்டு அரசாங்கத்துக்கு வழங்கும்.
மலேசியாவில் நேற்று முன்தினம் நில
வரப்படி 800,996 பேர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தோனீசியா, பிலிப்பீன்சுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவில் கடும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு
மலேசியா.

