மணிலா: பிலிப்பீன்சில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்
களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது. இந்தச் சூழலில், கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைக்க தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நடப்பில் வைப்பதா அல்லது வேலை, நிறுவன இழப்புகளைச் சரிசெய்ய, பொருளியலைத் திறந்துவிடுவதா என்பது குறித்த விவாதங்கள் அங்கு எழுந்துள்ளன.
நேற்று பிலிப்பீன்சில் 9,000 புதிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து, அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,006,428 ஆகியுள்ளது. அங்கு தொற்றால் கிட்டத்தட்ட 17,000 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்காசியாவில் இரண்டாவது அலையில் இந்தோனீசியாவுக்கு அடுத்தபடியாக, மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது பிலிப்பீன்ஸ்.
நாட்டில் பதிவான கிருமித்தொற்று எண்ணிக்கையில் ஏறத்தாழ பாதி மணிலா நகரில் பதிவாகியுள்ளன என்றும் அங்கு கடந்த மாத மத்தியிலிருந்து நடப்பில் இருக்கும் கடும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளால் தற்போது கிருமிப் பரவல் குறைந்திருப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், இவ்வளவு விரைவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னமும் நெருக்கடி நிலவும் வேளையில், இன்னும் ஓரிரு வாரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட சமூக தனிமைப்படுத்தலை நீட்டிப்பது நல்லது என சுகாதாரச் செயலாளர் ஃபிரான்சிஸ்கோ டக் குறிப்பிட்டார்.
மெட்ரோ மணிலா உட்பட ஐந்து மாகாணங்களில் மார்ச் மாதம் 29 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை கடுமையான பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. இம்மாதம் 11ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 30ஆம் தேதி வரை நடப்புக்கு வந்தன.
கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்த முடிவை அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே நாளை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

