அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 61 வயது சீனர் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த திரு மா யாவ் பான் என அமெரிக்க ஊடகம் அடையாளம் கண்டுள்ளது.
மளிகைப்பொருட்கள் நிறைந்த தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு திரு மா சென்றுகொண்டிருந்தபோது, ஆடவர் ஒருவர் அவரைத் தாக்கியதாக போலிசார் தெரிவித்தனர்.
முதுகில் அடிப்பட்டதும் திரு மா நடைபாதையில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மயங்கி விழுந்த திரு மாவின் தலையை அந்த ஆடவர் மிதித்தார். அதன் பிறகு, திரு மாவை அவர் பலமுறை உதைத்து அங்கிருந்து தப்பி ஓடினார். இந்தக் காட்சிகளைக் காட்டும் காணொளியை போலிசார் வெளியிட்டனர்.
திரு மா நடைபாதையில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் ஆம்புலன்சை அழைத்தார்.
தாக்குதலின் காரணமாக திரு மா கோமாவில் இருப்பதாகவும் அவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்தார்.
திரு மாவைத் தாக்கியவரை போலிசார் தேடி வருகின்றனர்.
இது இனவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அண்மையில் நியூயார்க்கில் ஆசியர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.