மியன்மார் ராணுவத்திற்கும் கிளர்ச்சிப்படைகளுக்கும் கடும் மோதல்
மே சரியாங் (தாய்லாந்து): மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அதைக் கண்டித்து நாடு முழுதும் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்நாட்டின் கேரன், கச்சின் ஆகிய சிறுபான்மையின கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக மியன்மாரில் தாய்லாந்து எல்லைப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான கேரன் இன மக்கள் உயிருக்கு அஞ்சி தாய்லாந்திற்கு அடைக்கலம் நாடிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
"பர்மாக்காரர்கள் எங்களைக் கண்டால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அதனால்தான் நாங்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட வேண்டியிருந்தது," என்று தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடி வந்த மக்கள் கூறுவதாக கேரன் கிராமவாசியான திரு சு வா என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தியாளரிடம் கூறினார். "தாய்லாந்து எல்லையில் உள்ள சல்வீன் ஆற்றைக் கடந்துதான் நாங்கள் தாய்லாந்தை அடைந்தோம்," என்றார் திரு சு வா.
மியன்மாரில் சல்வீன் ஆற்றோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்த வண்ணம் உள்ளனர். அப்பகுதியில் ராணுவத்தினருக்கு கேரன் போராளிகளுக்கும் சண்டை மூளும்போது அங்குள்ள மக்கள் ஆற்றின் குறுக்கே நடந்துசென்று தாய்லாந்துக்கு அடைக்காலம் நாடிச் செல்கின்றனர் என்று கேரன் சிறுபான்மையின ஆதரவுக் கட்டமைப்புக்குழு ஒன்று தெரிவித்தது. வரும் நாட்களில் 8,000க்கு மேற்பட்ட கேரன் இனத்தவர் சல்வீன் ஆற்றைக் கடந்து தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடிச் செல்லவிருக்கின்றனர். அவ்வாறு தாய்லாந்துக்கு வரும் கேரன் இன மக்களை தாய்லாந்து ராணுவம், அவர்களைத் திருப்பி அனுப்பாமல் காப்பாற்றி உதவும் என நம்புவதாக அந்த அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கேரன் இனப் போராளிகள் சல்வீன் ஆற்றுக்கு அருகேயுள்ள மியன்மாரின் ராணுவ முகாம் ஒன்றைத் தாக்கியது.
அந்தத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்களும் மூன்று போராளிகளும் கொல்லப்பட்டனர். அதையடுத்து மியன்மார் ராணுவம் தாய்லாந்து எல்லையில் பல இடங்களில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் தஞ்சமடைந்த கேரன் இன மக்கள் ஆற்றைக் கடந்து தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 2,267 பேர் தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடி வந்துள்ளதாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தனது எல்லைகளில் ராணுவத்தினரை நிறுத்தி, அகதிகள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ளது.
தாய்லாந்துக்குள் மியன்மார் மக்கள் நுழைவதை தாய்லாந்தின் பாதுகாப்புப் படையினர் தடுத்து வருகின்றனர். இதனால் அம்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரன் இனக் கிளர்ச்சியாளர்கள் தவிர்த்து இன்னொரு சிறுபான்மையினக் குழுவினரான கச்சின் எனும் இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் மியன்மார் ராணுவத்தினருக்கும் இடையேயும் கடுமையான சண்டை மூண்டுள்ளது.
கேரன், கச்சின் ஆகிய இரு சிறுபான்மையினக் குழுவினரோடு மேலும் சில சிறுபான்மையின கிளர்ச்சிக்குழுக்களின் படைகளும் மியன்மாரின் ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாகவும் ராணுவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றன.

