இஸ்ரேல்: சமயவிழா கூட்ட
நெருக்கடியில் சிக்கி 44 பேர் பலி
ஜெருசலம்: இஸ்ரேலில் நேற்று சமய விழா அனுசரிக்கப்பட்டது. மவுண்ட் மெரோனில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். குறுகலான இடத்தில் ஏராளமானோர் ஒன்றுதிரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 44 பேர் மாண்டனர்.
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான ரேபாய் ஷிமோன் பார் யோச்சாய் என்பவரின் நினைவுநாளை யொட்டி, அவரது கல்லறையில் ஆயிரக்கணக்கான யூதர்கள் ஒன்றுதிரண்டு இரவுநேர வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
இந்தச் சம்பவத்தை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மோசமான துயரச்சம்பவம் என்று கூறியுள்ளார். சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த விழாவுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அங்கு
50 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் தொற்று குறைந்ததை அடுத்தும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஹாங்காங்கில் உருமாறிய கொரோனா
ஹாங்காங்: ஹாங்காங்கில் முதன்முதலாக உருமாறிய கொரோனா தொற்று ஒருவரைப் பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகைத்தொற்று எளிதில் வேகமாகப் பரவக்கூடியது என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் 39 வயது பணிப்பெண் என்றும் அவருக்கு 10 மாதக் கைக்குழந்தை ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் காணப்பட்ட தொற்று 'என்501ஒய்' வகையைச் சேர்ந்தது என உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங்கின் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தப் பணிப்பெண் தங்கி இருந்த குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டைத் தளர்த்துகிறது பிரான்ஸ்
பாரிஸ்: கொவிட்-19 நெருக்கடியால் மூடப்பட்டிருந்த உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தகங்கள் போன்றவை மீண்டும் செயல்படுவதற்கு மே 19 ஆம் தேதி முதல் படிப்படியாக அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். ஆனால் சிற்றுண்டிச் சாலைகளும் உணவகங்களும் ஜூன் 9ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.
பிரான்சில் ஏற்பட்ட மூன்றாவது தொற்று அலையைத் தொடர்ந்து மூன்று முறை தேசியளவில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அங்கு தொற்றுப் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 324 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையுடன் இதுவரை 103,947 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றுப்பதிவு எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சராசரி 40,000ல் இருந்து 27,000 ஆகக் குறைந்துள்ளது.
தொடக்கப்பள்ளிகள் மூன்று வாரங்கள் மூடப்பட்டதற்குப் பின் இந்த வாரம் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளன. அதேபோல் உள்நாட்டுப் பயணங்களுக்கு இருந்த தடைகளும் அகற்றப்படும்.
இருப்பினும், தொற்று நம்மைப் பாதிக்காத வகையில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்று அதிபர் இமானுவல் தெரிவித்தார்.

