வாஷிங்டன்: உலகின் மிகவும் செல்வாக்குமிக்க அறக்கொடையாளர்களான பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதி திருமணமாகி 27 ஆண்டு
களுக்குப் பிறகு மணமுறிவு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
"மிகுந்த யோசனைக்குப் பிறகு திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள முடிவு செய்தோம்," என அந்தத் தம்பதி தங்களுடைய டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
"அருமையான மூன்று பிள்ளை
களை வளர்த்திருக்கிறோம், அனைத்துலக அளவில் மக்கள் சுகாதாரமான, திறன் மிகுந்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் விதத்தில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளோம்," என்று அவர்களது அறிக்கை தெரிவித்தது.
"எங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தைத் தம்பதியாக இணைந்து தொடர முடியாது என நம்புகிறோம்," என்று குறிப்பிட்ட அவர்களது அறிக்கையில், இந்தப் புதிய வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் தம் குடும்பத்துக்குத் தனிமை தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சியாட்டலில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கூட்டு விண்ணப்பத்தில், "மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு திருமண பந்தம் முறிந்துபோயுள்ளது," என்று குறிப்பிட்டிருந்தனர்.
சொத்துகளைப் பகிர்வது பற்றி ஒப்பந்தத்துக்கு தாங்கள் வந்திருப்பதாகவும் அதனை நீதிமன்றம் ஆமோதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அவர்கள், சொத்து விவரம் பற்றி விரிவாகத் தெரிவிக்கவில்லை.
தம்பதியின் இளைய பிள்ளைக்கு அண்மையில் 18 வயது பூர்த்தி
யானது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான திரு பில் கேட்ஸ், 65, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
அவரது மனைவி மெலிண்டாவுக்கு வயது 56. முன்னாள் மைக்ரோசாஃப்ட் மேலாளரான அவர் உலகளாவிய சுகாதாரம், பெண் சமத்துவம் போன்றவற்றுக்காக குரல் கொடுத்தார். அறநிறுவனத்தை திரு கேட்சுடன் இணைந்து நடத்தி வந்தார் அவர்.
உலகளாவிய சுகாதாரம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போர், அமெரிக்காவில் கல்வியை மேம்
படுத்துவது போன்றவற்றுக்காக தம்பதி அமைத்த அறக்கொடை நிறுவனத்தை நடத்துவதில் இருவரும் தொடர்ந்து செயல்படுவர் என்று கூறப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட லாபநோக்கற்ற 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' அறநிறுவனம், அனைத்துலக அளவில் ஆகப் பெரிய அறநிறுவனமாகவும் திகழ்கிறது. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, அந்த அற நிறுவனத்தின் சொத்து மதிப்பு 43.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (S$57.7 பில்லியன்).