வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பல இடங்களில் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கலாம் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் (சிடிசி) கூறியுள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு முடங்கியிருந்த நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான தொடக்கமே இது என சிடிசி கூறியுள்ளது.
அதற்காக கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டிக் கையேடு திருத்தப்பட்டுள்ளதாக சிடிசி கூறியது.
இந்த நடவடிக்கை அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் என்று நம்புவதாக சிடிசி கூறியது.
அதேபோல் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையம் கொவிட்-19 கட்டுப்பாடு குறித்த தனது திருத்தப்பட்ட வழிகாட்டிக் கையேட்டை வெளியிட்டது.
அந்தக் கையேட்டின்படி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் அதில் விதிக்கப்பட்டிருந்தன. அதற்கு பலதரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பின. அதையடுத்து சிடிசி தனது வழிகாட்டி கையேட்டில் திருத்தம் செய்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிடிசியின் இந்த அறிவிப்புக்கு பலதரப்பினரிடையே வரவேற்புக் கிடைத்துள்ளது.
இருப்பினும் தொழில்துறை சங்கங்களின் தலைவர்கள் இது தெளிவற்ற தன்மையைக் காட்டுவதாகக் குறை கூறியுள்ளனர்.
அதாவது, மாநிலங்கள் மற்றும் ஊர்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் இந்த அறிவிப்பு ஒத்துப்போகவில்லை என்று கூறினர்.
உள்ளூர் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதா சிடிசியின் அறிவிப்பைக் கவனத்தில் கொள்வதா என்று வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தைத் தந்துள்ளது சிடிசியின் திருத்தப்பட்ட வழிகாட்டிக் கையேடு என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதனை வரவேற்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிபர் பைடன் முகக்கவசம் இன்றி காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கு செய்தியாளர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய அதிபர் பைடன், "இது ஒரு நன்னாள். இதை ஒரு சிறந்த மைல்கல் என்றே நான் கருதுகிறேன்," என்று கூறினார்.
அந்தக்கூட்டத்தில் அதிபர் பைடன், தனது முகக்கவசத்தைக் கழற்றியதும் அங்கு வந்திருந்த செய்தியாளர்களும் தாங்கள் அணிந்திருந்த முகக்கவசங்களைக் கழற்றினர்.
"நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தீர்கள் எனில், உங்கள் முகக்கவசங்களை அகற்றிவிடலாம். அதற்கான உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள்," என்று திரு பைடன் கூறினார்.

