தோக்கியோ: ஜப்பானில் மேலும் மூன்று மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொருளியல் துறைக்கான அமைச்சர் யாசுடோஷி நிஷிமுரா நேற்று கூறினார்.
ஹொக்கைடோ, ஒகயாமா மற்றும் ஹிரோஷிமா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள தோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறினார் அமைச்சர் யாசுடோஷி. இவர் கொரோனா தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிக்கிறார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில் ஜப்பானில் மூன்று விழுக்காடு மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசி பணி மந்தமாக நடைபெற்று வருவதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஜப்பானின் வடக்குத் தீவு மாநிலமான ஹொக்கைய்டோவில் நேற்றைய நிலவரப்படி 712 புதிய தொற்று பாதிப்புகளும் தோக்கியோவில் 1,010 தொற்று பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை ஜப்பானில் மொத்தம் 656,000 தொற்றுப் பாதிப்புகளும் 11,161 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன.

