பெய்ஜிங்: சீனாவின் 'ஷுரோங்' ஆறு சக்கர ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷுரோங்கை ஏந்தியிருந்த விண்கலம் வான்குடை உதவியுடன் ஏழு நிமிட கடினமான பயணத்தை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தின் உடோபியா பிளானிஷியா என்ற இடத்தில் துல்லியமாகத் தரையிறங்கியது.
"முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வுக் கலம் வெற்றிகரமாக இறங்கியது," என்று சீன தேசிய விண்வெளி நிர்வாகம் உறுதிப்படுத்தியதை சுட்டிக்காட்டி அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஸின்ஹுவா பெருமையுடன் அறிவித்தது.
செவ்வாய் கிரகத்துக்கு மேற்கொண்ட முதல் பயணத்திலேயே அதன் சுற்றுப்பாதையில் நுழைந்து வெற்றிகரமாகத் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
இதற்கிடையே சீன அதிபர் ஸி ஜின்பிங், இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டியுள்ளார்.
"சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டீர்கள், கிரகங்களை ஆய்வு செய்யும் வரிசையில் சீனாவை இடம்பெறச் செய்தீர்கள்.நாடும் நாட்டு மக்களும் மறக்க முடியாத சாதனையைப் புரிந்துள்ளீர்கள்," என்று திரு ஸி குறிப்பிட்டார்.
பெய்ஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஷுரோங் தரையிறங்கும் உயிரோவியக் காட்சி காட்டப்பட்டது. அதைப்பார்த்து அறிவியல் அறிஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சூரிய சக்தியில் இயங்கும் ஆறு சக்கரங்கள் கொண்ட ஷுரோங் ஆய்வுக் கலம் 240 கிலோ எடையைக் கொண்டது.
செவ்வாய் கிரகத்தில் மண், பாறை, துகள்களை சேகரித்து அது மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.
பின்னர் அதிலிருந்து பிரிந்து தரையிறங்க உதவும் சாதனத்தின் மூலம் 'ஷுரோங்' ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைத் தொட்டது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு 3வது நாடாக சீனா செவ்வாய்க் கிரகத்தை நெருங்கியுள்ளது. சென்ற பிப்ரவரியில் அெமரிக் காவின் 'நாசா', பெர்சிவரன்ஸ் ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறக்கி சாதனை படைத்தது.
அந்த ஆய்வுக் கலம் இன்னமும் செவ்வாய் கிரகத்தில் ஓடி வரு கிறது.

