மெல்பர்ன்: கொவிட்-19 கிருமித்தொற்றால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் ஆஸ்திரேலியா தற்காலிகத் தடை விதித்தது.
ஆனால் இதனை சொந்த நாட்டினரே குறைகூறினர்.
இதையடுத்து தனது நாட்டு மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் பணியை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.
நேற்று புதுடெல்லியிலிருந்து டார்வினை நோக்கிப் புறப்பட்ட முதல் விமானத்தில் எண்பது பேர் பயணம் செய்தனர்.
ஆஸ்திரேலிய அரசாங்க ஆதரவு குவாண்டாஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு இரு முறை கொவிட்-19 பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை பயணிகள் வழங்க வேண்டும். டார்வின் வந்தடைந்ததும் பயணிகள் இரு வாரம் தனிமைப் படுத்தப்படுவர்.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்ததால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை சொந்த நாட்டு மக்களே கடுமையாக விமர்சித்தனர். குடிமக்கள்கூட நாடு திரும்ப முடியவில்லை என்று பலர் அரசாங்கத்தைச் சாடினர். இதையடுத்து நாட்டு மக்களை அழைத்துச் செல்லும் பணியை ஆஸ்திரேலியா தொடங்கியது.
"மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றி இங்குள்ள ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறோம்," என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் தெரிவித்தார்.
ஜூன் மாத இறுதிக்குள் இந்தியாவிலிருந்து மேலும் ஆயிரம் பேரை ஏற்றிச்செல்ல இரண்டு விமானங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 9,000 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் பதிவு செய்துள்ளனர்.

