சிட்னி: கொவிட்-19 நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியாவிலிருந்து தப்பி வெளியேறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மாலத்தீவு வழியாக நாடு திரும்பியுள்ளனர்.
இந்திய பிரிமியர் லீக்(ஐபிஎல்) போட்டியில் அவர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் கிருமித்தொற்று பரவுவதால் இம்மாதம் ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் சிக்கியுள்ள வேளையில் இந்தத் தடை அறிவிக்கப்பபட்டது.
இதனால் ஆஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து இம்மாதம் 15ஆம் தேதி சர்ச்சைக்குரிய தடையை ஆஸ்திரேலியா விலக்கிக்கொண்டது. இதன் பிறகு இந்தியாவுக்கு விமானங்களை அனுப்பி தமது நாட்டு மக்களைஅது மீட்டு வருகிறது.
இதற்கு முன்னதாகவே இம்மாதம் 6ஆம் தேதி இந்தியாவிலிருந்து வெளியேறி மாலத்தீவு சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பின்னர் தனியார் விமானம் மூலம் சிட்னி வந்து சேர்ந்துள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நாடு திரும்பிய வீரர்களில் சிலர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமையை நிறைவேற்ற வேண்டும்.

