மூன்று தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (மே 18) தெரிவித்துள்ளது.
யூஹுவா தொடக்கப்பள்ளி, கத்தோலிக்கப் பள்ளி (தொடக்கநிலை), சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளி ஆகியவை அந்த மூன்று பள்ளிகள்.
அந்த மூன்று மாணவர்களுக்கும் பள்ளிக்கு வெளியில் கிருமி தொற்றியது.
'லர்னிங் பாய்ண்ட்' துணைப்பாட நிலையத்தில் கிருமி தொற்றிய தனியார் துணைப்பாட ஆசிரியர் நடத்திய வகுப்புகளுக்கு கத்தோலிக்கப் பள்ளி மாணவர் சென்றிருந்தார். அந்த மாணவருக்கு நேற்று (மே 17) தொற்று உறுதியானது.
பள்ளியில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளி மாணவர் ஏற்கேனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளார். செயின்ட் ஸ்டீஃபன்'ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முன்னதாக கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் சென்றிருந்த அதே மாணவர் பராமரிப்பு நிலையத்திற்கு சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளி மாணவரும் சென்றிருந்தார்.
யூஹுவா தொடக்கப்பள்ளி மாணவருக்கு நேற்று (மே 17) தொற்று உறுதியானது. அவரது குடும்ப உறுப்பினருக்கு மே 14ஆம் தேதி தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்கப் பள்ளியும் (தொடக்கநிலை) சிஎச்ஐஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளியும் நாளை (மே 19) முதல் வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையைத் தொடங்கவிருக்கின்றன. யூஹுவா தொடக்கப்பள்ளி வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

