காஸா நகர்: சண்டை நிறுத்த அழைப்புகளைப் புறந்தள்ளி இஸ்ரேலியப் படையினரும் பாலஸ்தீன போராளிகளும் சண்டையைத் தொடர்ந்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு சில மணி நேரம் சண்டை ஓய்ந்திருந்த நிலையில் நள்ளிரவுக்குப் பிறகு இருதரப்பிலும் தாக்குதல் தொடங்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
கரும்புகையுடன் கூடிய தீப்பந்து ஒன்று நேற்று அதிகாலை காஸா கட்டடம் ஒன்றின் மீது விழுந்ததாக ஏஎஃப்பி செய்தியாளர் கூறினார். இஸ்ரேலின் ஆக அண்மைய தாக்குதல் இது என்றும் அவர் குறிப் பிட்டார்.
வெடிகுண்டு தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அைனத்துலக அழைப்புகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், "பயங்கரவாதி
களைக் குறிவைத்து தாக்குதல் தொடரும்," என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு திங்கட்கிழமை பின்னேரத்தில் கூறினார்.
அன்று நள்ளிரவுக்குப் பின்னர் காஸா மீது 65க்கும் மேற்பட்ட வான்தாக்குதல்களை இஸ்ரேலியப் படையினர் நடத்தியதாகவும் எதிர்முனையிலிருந்து 90 ராக்கெட்டுகளை பாலஸ்தீனப் போராளிகள் ஏவியதாகவும் பிபிசி செய்தியாளர் கூறினார்.
தாக்குதல்களின் விளைவாக காஸாவில் உள்ள கட்டடங்கள் பல எரிந்தன. அவற்றின் அருகில் இருந்த பல கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சிக்கியதைப் போல குலுங்கின.
ஆக அண்மைய நிலவரப்படி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் 212 பாலஸ்தீனர்கள் காஸாவில் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 61 குழந்தைகளும் அடங்கும். அதே நேரம் பாலஸ்தீன ஆயுதக் குழு ஏவிய ராக்கெட்டுகளால் இஸ்ரேலில் ஒரு குழந்தை உள்ளிட்ட 10 பேர் மாண்டனர். இருதரப்பையும் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள் இவை என்று ஏஎஃப்பி செய்தியாளர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை இரவு திரு நெட்டன்யாகுவுடன் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சண்டை நிறுத்தத்தைத் தாம் ஆதரிப்பதாக அவரிடம் கூறினார். தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றமும் நேற்று அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

