தைப்பே: பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இன்று புதன் கிழமை முதல் இம்மாதம் 28ஆம் தேதி வரை மூடப்படும் என்று தைவான் அரசாங்கம் நேற்று அறிவித்தது. வகுப்பு களை இணையம் வழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புதிதாகப் பதிவான தொற்று எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதிலும் புதிதாக இருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடு களை தைவான் கடுமையாக்க தொடங்கி உள்ளது.
புதிய கிருமிப் பரவல் அலை காரணமாக கடந்த வாரத்தில் உள்ளூரில் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக தலைநகர் தைப்பேயில் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்தன.
புதிய தொற்று நிலவரம் தைவானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொற்றுப் பரவலைத் திறம்படக் கையாண்டு, கொள்ளைநோயை கட்டுக்குள் வைத்திருந்த தைவானில் வழக்கநிலை படிப்படியாகத் திரும்பிக்கொண் டிருந்த வேளையில் புதிய தொற்றுச் சம்பவங்கள் பெருகி வருகின்றன.
திங்கட்கிழமை உள்ளூரில் 333 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 240 ஆனது.
மேலும், புதிதாக இருவர் மாண்டதைத் தொடர்ந்து அங்கு இதுவரை தொற்றுக்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14க்கு உயர்ந்தது.
இந்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தைவான் சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங், தொற்று எண்ணிக்கையில் சிறிய சரிவு ஏற்பட்டது தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததாகப் பொருள்
படாது என்றார்.
இருப்பினும், புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோரிடம் இலேசான பாதிப்புகளே உணரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

