தோக்கியோ: ஜப்பானில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒக்கினவா தீவில் தீவிரமடைந்து வருகிறது. அதனையடுத்து அந்தத் தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கிய முடக்கநிலையை ஜப்பான் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் தடுப்பூசி போடும் பணியையும் முழு வீச்சில் செயல்படுத்துவதற்கு மொடர்னா மற்றும் அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டின் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இருப்பினும் ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி பயன்படுத்துவதால் இரத்த உறைவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் அந்த மருந்தைப் பயன்பாட்டுக்கு விநியோகிப்பதை ஜப்பான் மேலும் சில காலங்களுக்குத் தள்ளிவைக்கலாம் என்று ஜப்பானின் ஊடகங்கள் சில கூறியுள்ளன.
ஜப்பான் கடந்த பிப்ரவரி மாத நடுப்பகுதியில் பைஃசர் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது. இருப்பினும், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3.9 விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜப்பானில் தடுப்பூசி போடும் பணி, பெரிய, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 120 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வாங்க ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளது. இது 60 மில்லியன் பேருக்குப் போதுமானதாக இருக்கும். ஜப்பானை உள்ளடக்கிய ஜி7 நாடுகளில் சில தொற்று நெருக்கடியில் இருந்து மீண்டு, நடப்பிலிருக்கும் முடக்கநிலையை நீக்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ஆனால், ஜப்பான் மட்டும் தொற்றின் நான்காவது அலையின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, முடக்கநிலையில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறது.
ஜப்பானில் இதுவரை தோக்கியோ உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒக்கினவா தீவில் முடக்கநிலையை அறிவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
ஜப்பானில் இதுவரை 695,000 தொற்றும், 12,000 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன. இது பல நாடுகளைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும் அங்கு தொற்று அதிகரிப்பால் சுகாதாரத்துறை திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

