இஸ்தான்புல்: உருமாற்றக் கிருமியான பி1617க்கு எதிராக செயல்படும் ஆற்றல் ஃபைசர் தடுப்பூசி மருந்துக்கு உள்ளது என்று பயோஎன்டெக் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் உருவானதாகக் கூறப்படும் கொவிட்-19 கிருமித்தொற்று, பல நாடுகளுக்குப் பரவி உருமாற்றம் பெற்றுள்ளது. அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் பி.1.351 கிருமியும் இந்தியாவில் பி1617 கிருமியும் ஆக கொரோனா தொற்று உருமாற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உகுர் சாஹின், ஃபைசர் தடுப்பூசி மருந்து பி1617 கிருமிக்கு எதிராகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் ரத்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் தரவுகள் இதைத் தெளிவுபடுத்துவதாக திரு சாஹின் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆற்றலை ஃபைசர் கொண்டுள்ளது என முன்னதாக நடத்தப்பட்ட ரத்த பகுப்பாய்வுச் சோதனையில் 75 விழுக்காடு செயல்திறன் இருப்பது தெரியவந்தது. இதுவரை 30 வகை உருமாறிய கிருமிகளுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி மருந்து சோதிக்கப்பட்டுள்ளது. அனைத்துச் சோதனைகளிலும் உருமாறிய கிருமிகளுக்கு எதிரான ஆற்றலை ஃபைசர் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது திரு சாஹின் தெரிவித்தார். மேலும், ஃபைசர் தடுப்பூசி தொற்றுக்கு எதிராக 70 முதல் 75 விழுக்காடு பாதுகாப்பு தரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பி1617.2 எனப் பெயரிடப்பட்ட உருமாறிய கிருமித்தொற்று முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. அது அந்த நாட்டில் அதிவேகமாகப் பரவி அதிகமானோரை பலிகொண்டது.
மேலும் பல நாடுகளுக்கும் பரவி உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலைத் தந்துள்ளது.

