வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிராக வெறுப்புணர்வுத் தாக்குதல்கள், வன்முறைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாடு, இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கடுமையான சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
அதற்கான சடங்குபூர்வ கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அந்தப் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆவணத்தில் நேற்று முன்தினம் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அப்போது உரையாற்றிய அதிபர் பைடன், "சார்பு மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களைத் தடுக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்," என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதியளித்தார்.
"வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க மக்களின் மனதை நாம் மாற்ற வேண்டியுள்ளது.
"தனிப்பட்ட ஒருசாரார் மீது வெறுப்புணர்வைக் காட்டுவதற்கான இடம் அமெரிக்கா இல்லை. இதுபோன்ற செயல்களைக் கண்டுகொள்ளாமல் இது இப்படித்தான் என்று அப்படியே விட்டுவிட முடியாது.
"இவற்றைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்தால், அந்த மௌனம் இதுபோன்ற செயல்களுக்குத் துணைபோவதாகவே கருதப்படும்.
"இதுபோன்ற வன்முறைகளைக் கண்டும் காணாமல் அமைதி காப்பது என்பது நாமும் அதற்கு உடந்தையாக இருப்பதைப் போன்றதே.
"வன்முறையைக் கண்டு நாம் அமைதிகாக்கும் ஒவ்வொரு முறையும் வெறுப்புணர்வு வளர்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறோம். அவ்வாறு செய்வதால் நாமெல்லாம் ஒரு நாடு என்பதை நாமே பொய்யாக்குகிறோம்," என்று கூறினார் அதிபர் பைடன்.

