ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் மியன்மார் ராணுவத் தலைவரின் முதல் நேர்காணல்
யங்கூன்: ஆங் சான் சூச்சி வீட்டில் நலமாக இருக்கிறார் என்றும் இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்றும் மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங் நேற்று கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் அளித்துள்ள தம் முதல் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததை அடுத்து கலவரம் ஓயாத நிலையில் மியன்மார் சிக்கியுள்ளது.
இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவரும் ஓர் ஆயுதமேந்திய இனவாதக் குழு, நேற்று ராணுவத் தளம் ஒன்றைத் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
"ஆங் சான் சூச்சி நலமாக இருக்கிறார். அவரது வீட்டில் ஆரோக்கியமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கும்," என்று மின் அவுங் லைங் காணொளிப் பேட்டியில் குறிப்பிட்டார். 75 வயது சூச்சியின் செயல்திறன் பற்றி என்ன நினைக்கிறார் என்று பேட்டியில் கேட்கப்பட்டபோது, "அவரால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தார்," என்று மின் அவுங் லைங் பதிலளித்தார்.
கடந்த நவம்பர் மாதம் சூச்சியின் கட்சி வெற்றிபெற்றிருந்த தேர்தல், முறைகேடாக நடந்தது என்று அடையாளங்கண்டதை அடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனும் ராணுவத்தின் கூற்றைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தேர்தலை ராணுவம் ஏற்று நடத்தும் என்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் அமைப்பில் மாற்றம் தேவைப்படும் அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் மின் அவுங் லைங் கூறினார்.
திங்கட்கிழமையன்று சூச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று கூறப்படுகிறது. இதுவரை அவர் காணொளி மூலமாகவே தோன்றியுள்ளார். அத்துடன் அவரின் வழக்கறிஞர்களிடமும் அவர் நேரடியாகப் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று ராணுவத் தளம் மீது 'கச்சின் சுய ஆட்சி ராணுவம்' மேற்கொண்ட தாக்குதலில் அதிகமான கரும்புகை சம்பவ இடத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து ராணுவத்திற்கும் கச்சின் சுய ஆட்சி ராணுவத்திற்கும் இடையே இத்தகைய மோதல் நிகழ்ந்து வருகிறது.

