தோக்கியோ: கொவிட்-19 காரணமாக தோக்கியோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக்ஸ் குழுவின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் கூறியுள்ளார்.
விளையாட்டுகள் தொடங்க இன்னும் ஒன்பதே வாரங்கள் உள்ள நிலையில், ஏற்கெனவே கொள்ளைநோய் சூழலால் நெருக்கடியில் திணறும் நாட்டின் மருத்துவ அமைப்புமுறை மீது, தோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளால் பாரம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இப்பதற்றநிலையைக் களைவதில் அனைத்துலக ஒலிம்பிக்ஸ் குழு கவனம் செலுத்தி வருகிறது.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளுக்குத் தயாராகும் பணிகள் தொடர்பில் நடைபெற்ற மூன்று நாள் இணையச் சந்திப்புக் கூட்டத்தில் குழு இவ்வாறு தெரிவித்திருந்தது.
விளையாட்டுகள் நடைபெறுவதற்குப் பொதுமக்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுகளைத் தள்ளி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என்று ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒன்றில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் கூறி இருந்தனர்.
ஒலிம்பிக்ஸ் ஜூலை 23ஆம் தேதியன்று தொடங்குவதற்கு முன்னதாகவே ஒலிம்பிக் வளாகத்தில் உள்ளவர்களில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்றார் கோட்ஸ். விளையாட்டு வீரர்கள், ஜப்பான் மக்கள் ஆகியோரது பாதுகாப்பு, ஆரோக்கியம் இரண்டையும் கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட தயாராக உள்ளதாக அவர் விவரித்தார்.
இதுவரை, ஜப்பான் அதன் மக்களில் 4.1 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது.

