கோலாலம்பூர்: மேலும் 6,320 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக மலேசியா நேற்று அறிவித்தது. இத்துடன் நாட்டின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 505,115ஐ எட்டியுள்ளது.
அத்துடன் ஒரே நாளில் 50 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மலேசியாவில் மொத்தம் 2,199 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.
தொடர்ந்து சிலாங்கூரில் ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று அங்கு 1,647 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. இரண்டாவது இடத்தில் சரவாக் மாநிலமும் மூன்றாவது இடத்தில் கோலாலம்பூரும் இடம்பெற்றுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக பதிவாகும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 6,000க்கும் மேலாகவே உள்ளது. வியாழக்கிழமையன்று பதிவான 6,806 சம்பவங்களும் 59 உயிரிழப்புகளுமே ஆக அதிகம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் மக்கள் ஈரடுக்கு முகக்கவசம் அணியலாம் என்று நேற்று பரிந்துரை செய்தார் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
'பதற்றத்தில் பொருட்கள் வாங்கி
குவிப்பதைத் தவிர்க்கவும்'
மலேசியாவில் கொவிட்-19 தொடர்பில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மே 25 முதல் மேலும் கடுமையாகவுள்ளன. இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவில் இருப்பதாகக் கூறியுள்ளது அந்நாட்டு உள்ளூர் வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சு.
எனவே, பதற்றத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களை வாங்க வேண்டாம் என்று அது அறிவுறுத்தி உள்ளது.
'எம்சிஓ 3.0' எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருக்கும் காலகட்டத்திற்குத் தேவையான இருப்புகள் நாட்டில் உள்ளதென அமைச்சின் அமலாக்க இயக்குநர் அஸ்மான் அதாம் கூறினார்.
பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயனீட்டாளர்கள் வாங்கினால் விநியோகத் தடை ஏற்பட்டுவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே நாட்டின் விநியோகத் தொடர், அமைச்சால் கண்காணிக்கப்பட்டு வருவதால் 'எம்சிஓ 3.0' காலகட்டத்திலும் அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை பயனீட்டாளர்களுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டது.
இருப்பினும், சில்லறை வர்த்தகர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகிப்பாளர்கள் ஆகியோர் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஜோகூர் பயனீட்டாளர் இயக்கச் சங்கத்தின் தலைவர் முகம்மது சலே சடிஜோ.
நம்பிக்கை அளிக்கும்
ஒரு நாள் தடுப்பூசி விகிதம்
இதற்கிடையே புதன்கிழமையன்று மலேசியாவில் ஒரே நாளில் ஆக அதிகமாக 80,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் தொடர்பில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்று வெளியிட்ட தகவலின்படி, புதன்கிழமையன்று 83,648 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
அன்றைய தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 83,648 பேரில் 49,722 பேர் முதல் தடுப்பூசியைப் போட்டவர்கள் என்றும் எஞ்சிய 33,926 பேர் தங்களின் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது.
மலேசியாவில் இந்த மாதம் 2ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் விகிதம் அதிகரித்தது. ஆனால், நோன்புப் பெருநாள் விடுமுறையின்போது அந்த விகிதம் சரியத் தொடங்கியது.

