கோலாலம்பூர்: மலேசியாவில் 24 மணி நேரத்தில் 7,289 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிருமிப் பரவல் தொடங்கியது முதல் மலேசியாவில் ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. மேலும் முதல்முறையாக தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் 6,976 என தொற்று எண்ணிக்கை பதிவானதே ஒரே நாளில் மலேசியாவில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை எனக் கருதப்பட்ட நிலையில் நேற்று அது மேலும் அதிகரித்தது.
தொடர்ச்சியாக ஏழு நாட்கள் 6,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்று அது 7,000ஐ கடந்தது. இதனையும் சேர்த்து மலேசியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 525,889ஆக அதிகரித்துவிட்டது.
மூன்றாம் கட்ட கிருமிப் பரவலை எதிர்த்து மலேசியா போராடி வருகிறது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் உள்ள தீவிரக் கண்காணிப்புப் பிரிவுகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
புதிய தொற்று எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் பதிவாகி வருகிறது. குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் 2,642 என நேற்று பதிவான நிலையில் கோலாலம்பூரில் அந்த எண்ணிக்கை 604 ஆக இருந்தது.
அண்டைய நெகிரி செம்பிலானிலும் பாகாங்கிலும் முறையே 410 மற்றும் 211 தொற்றுச் சம்பவங்கள் நேற்று பதிவாயின.
அதேநேரம் ஜோகூரில் 664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பினாங்கில் அந்த எண்ணிக்கை 380ஆக இருந்தது.
தொற்றுப் பரவல் அதிவேக நிலையை எட்டி இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.
2021 ஏப்ரல் 1 முதல் அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மோசமான கட்டத்தைச் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று நேற்று அவர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டார்.
தொற்றுப் பரவலை முறியடிக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
"பதிவாகும் உண்மை நிலவரங்களையும் தரவுகளையும் புறக்கணிப்பது நிலைமையை மேம்படுத்த உதவாது.
"மேலும் வீட்டில் தங்காமல் வெளியில் வருவதற்குச் சொல்லப்படும் காரணங்களும் தொற்று முறி யடிப்பு முயற்சிக்குப் பலன் தராது," என திரு நூர் ஹிஷாம் கூறினார்.
மலேசியாவில் நேற்று முன்தினம் தொற்று காரணமாக 61 பேர் உயிரிழந்தனர்.
711 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த இரு எண்ணிக்கையும் மலேசியா இதுவரை கண்டிராதவை. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

