பேங்காக்: கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் மற்றொரு ஆசிய நாடான தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் நிலவுவதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
கிருமித்தொற்று கடந்த ஆண்டு பரவத் தொடங்கியது முதல் தாய்லாந்தில் 135,439 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை 832 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் வரும் ஜூன் 7ஆம் தேதி மாபெரும் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்குவதற்கான பணிகளில் அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டு இறுதிக்குள் சுமார் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவது அவர்களின் இலக்கு. ஆனால் 'யூகோவ்' என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 63 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதம் இந்த விழுக்காடு 83 ஆக இருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'சுவான் டுசிட்' என்னும் உள்ளூர் நிறுவன கருத்துக்கணிப்பும் கிட்டத்தட்ட இதனையே பிரதிபலித்தது. 64 விழுக்காட்டு மக்களே தடுப்பூசிக்குத் தயாராக இருப்பதாக அது குறிப்பிட்டது.
"அரசாங்கம் வாங்கி வைத்துள்ள தடுப்பூசிகள் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள்.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டோம் என்பதைக் காட்டிலும் தடுப்பூசிக்கு முன்வருவதில் தயக்கமே அதிகம் உள்ளது," என்று ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கூறினார். இதேபோல பலரும் சமூக ஊடகங்களில் கூறிவருகின்றனர்.

