கெய்ரோ: எகிப்து அதிபர் அப்துல்ஃபட்டா அல்-சிசியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வழி தொடர்புகொண்டு காஸா சண்டை நிறுத்ததை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது, அனைத்துலக மறுநிர்மாண முயற்சிகளை முடுக்கிவிடுவது போன்ற விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக எகிப்து அதிபர் மாளிகை தெரிவித்தது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அமைதியை மீட்டெடுக்கும் நடைமுறைகள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக அது தனது அறிக்கையில் கூறியது.
இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையில் 11 நாட்கள் நீடித்த சண்டை எகிப்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.
சண்டை நிறுத்தத்தின் நான்காவது நாளில் இரு தலைவர்களின் ஆலோசனை இடம்பெற்றது. வரும் திங்கட்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் அந்த வட்டாரத்திற்கு வருகை மேற்கொள்ளும்போது கெய்ரோவில் இறங்கி சமாதான முயற்சிகளைக் கையாள்வது தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.

