தைப்பே: ஜெர்மனியின் பயோஎன்டெக் உடனான தடுப்பூசி ஒப்பந்தத்தைத் தடுத்ததாக தைவான் முதல் முறையாக சீனா மீது நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
அஸ்ட்ராஸெனிக்கா மற்றும் மொடர்னாவிடம் பல மில்லியன்
கணக்கான தடுப்பூசிகளுக்கு தைவான் பதிவு செய்துள்ளது. ஆனால், இதுவரை கிட்டத்தட்ட 700,000 தடுப்பூசிகள் மட்டுமே தைவானுக்குச் சென்று சேர்ந்துள்ளது.
அங்கு கிருமிப் பரவல் வேகமெடுத்து உள்ள நிலையில், வெறும் 1 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பயோஎன்டெக் உடனான ஒப்பந்தத்தைப் பெறுவதில் சீனாவின் நெருக்கடி இருப்பதாக முன்பு மறைமுகமாக கூறி வந்த தைவான் தற்போது நேரடியாகவே சாடியுள்ளது.
தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் கூட்டத்தில் பேசிய அதிபர் சாய் இங்-வென், "அஸ்ட்ராஸெனிகா, மொடர்னா தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம் சுமுகமாக முடிந்தது.
"ஜெர்மனியின் பயோஎன்டெக் தடுப்பூசியைப் பொறுத்தவரை, நாங்கள் கிட்டத்திட்ட அதன் ஒப்பந்தத்தைப் பெற நெருங்கிவிட்டோம். ஆனால், சீனாவின் தலையீடு காரணமாக இப்போது வரை அதை முடிக்க வழி இல்லை," என்று கூறினார்.
இதுபற்றி பயோஎன்டெக் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் தாங்கள் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
இதற்கிடையே, நேற்று தைவானில் 633 புதிய தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதன்படி அங்கு உணவகங்களில் உணவருந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கொவிட்-19
கிருமித்தொற்று பரிசோதனை முடிவுக்காக மக்கள் ஒன்பது நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில், கிருமித்தொற்று பரிசோதனை மேற் கொள்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதால், அவற்றைச் சமாளிக்க பரிசோதனை மையங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் முடிவுகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

